கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, 2002-ல் குஜராத் முழுவதும் நிகழ்ந்த கலவரத்துக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி உறுதுணையாக இருந்தார் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சஞ்சீவ் பட் என்ற அந்த அதிகாரி தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ராவில் நடந்த கலவரம் தொடர்பாக முதல்வர் மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை அதிகாரி என்ற முறையில் நானும் கலந்துகொண்டேன்.
குஜராத்தில் மதக் கலவரங்களைக் கையாள்வதைப் பொறுத்தவரை, குஜராத் காவல்துறை நடுநிலையோடு செயல்பட்டு வந்தது. 'இந்த முறை முஸ்லிம்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது' என்று காவல்துறை அதிகாரிகளிடம் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
அப்போது, இந்துக்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதால், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் என்றும் மோடி கூறினார். மோடியின் உத்தரவை காவல்துறை உயர் அதிகாரிகள்கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினர்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அகமதாபாத் கொண்டுவருவதும், விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்ட கடையடைப்புப் போராட்டத்துக்கு பிஜேபி ஆதரவளிப்பதும் அகமதாபாத்திலும், குஜராத்தின் பிற பகுதிகளிலும் கலவரத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அதை சமாளிக்கும் அளவுக்கு காவல்துறைக்கு பலம் இல்லை என்றும் மோடிக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால், அவர் அதை நிராகரித்துவிட்டார்.
கோத்ராவில் கரசேவகர்களைக் கொல்வதைப் போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மோடி கூறினார்.
இந்த விவரங்களை கடந்த 2009-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போது, சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் நான் பகிர்ந்து கொண்டேன். ஆனால் அந்தத் தகவல்களின் அடிப்படையில் மோடியும், அவரது அமைச்சர்களுக்கு கலவரத்தில் உள்ள தொடர்பு குறித்து ஆராயாமல், சிறப்புப் புலனாய்வுக் குழுவால் எனது கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டுவிட்டன.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, உண்மையை மறைக்க முயன்றதே தவிர, கோத்ரா கலவரத்தின் பின்னணியில் உள்ள சதியை வெளிச்சத்துக்குக் ண்டுவரத் தயாராக இல்லை. அதனால், அந்தக் குழுவின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன்,' என்று சஞ்சீவ் பட் கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1988-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், குஜராத்தில் கலவரம் நிகழ்ந்த போது மாநில புலனாய்வுப் பிரிவில் இணை கமிஷனராக இருந்தார். இப்போது, மாநில ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தின் தலைவராக இருக்கிறார்.
'நரேந்திர மோடி மீது மூத்த ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு பிஜேபி பதில் என்ன? சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பிரதமரை பதவி விலகக் கோரும் பிஜேபி மேலிடம், இந்த விஷயத்தில் நாட்டு மக்களுக்கு என்ன கூற இருக்கிறது என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேநேரத்தில், ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ள தகவல்கள் உண்மையானது அல்ல. இந்த குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதி கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று பிஜேபி மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இதனிடையே, தாம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள விஷயங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சஞ்சீவ் பட், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உச்ச நீதிமன்றம் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2002 பிப்ரவரியில் கோத்ராவில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டி தீவைத்து எரிக்கப்பட்டது. அதில் அயோத்தியில் இருந்து திரும்பிய கரசேகவர்கள் உள்பட சிறுவர்கள், முதியவர்கள் என 58 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து குஜராத் முழுவதும் கலவரம் பரவியது. இதில் மாநிலம் முழுவதும் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக