திங்கள், 18 ஜூலை, 2011

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.

ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.


இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின் ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். 'ஷப்-ஏ-பராஅத்' இல் உள்ள 'ஷப்' என்பது அரபிச் சொல் கிடையாது; 'இரவு' என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். 'ஏ'காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு 'ஷப்-ஏ-பராஅத்' என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.


எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் . இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்).


இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும் நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.


அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.


நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:

  1. அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை)
  2. அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி)
  3. ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.

இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை.(ஆதார நூல்கள்: முஸ்லிம். அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)


நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.


நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும்விட - ரமலானுக்கு அடுத்தபடியாக - ஷஃ'பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.


ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:


"நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ'பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவூத், நஸயி).

நபி (ஸல்) அவர்கள், 'நோன்பை விடவேமாட்டார்களோ' என்று நாம் நினைக்கும் அளவுக்கு(சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் 'நோன்பிருக்க மாட்டர்களோ' என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ'பானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்).


அமல்கள் உயர்த்தப்படும் மாதம்:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! ஷஃ'பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை' என்று கூறிய போது, நபியவர்கள், "மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள(ஷஃ'பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்" என கூறினார்கள். (ஆதாரம்: நஸயி, அஹ்மத்).


இதற்கு மாற்றமாக ஷஃ'பான் மாதத்தில், பிறை 15ல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு 'பித்அத்' தான காரியமாகும்.


நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கு துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல; துவாச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்து வர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியாகும்.


வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் விளைவிக்காது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நமது மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நமது ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.


இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துவா செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.


ரமளானுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ).


மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.


அதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாக ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.


அற்புதமான இந்த ஷஃ'பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.


ஆக்கம்: அப்துல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமுமுக துபை மண்டலம் Headline Animator

LinkWithin

Related Posts with Thumbnails

குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!